ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று நோய் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில் பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியைத் தொடர்ந்து இங்கிலாந்திலும் மீண்டும் தேசிய அளவிலான பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் டிசம்பம் 2 ஆம் திகதி வரை நான்கு வாரங்களுக்கு இங்கிலாந்து முழுவதும் பொது முடக்கம் அமுலில் இருக்கும் என பிராதமர் போரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.
தொற்று நோய்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதன் மூலம் பொது சுகாதாரத் துறை தனது திறனை இழப்பதைத் தவிர்க்கும் வகையில் இந்த பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கிறிஸ்மஸ் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் கொண்டாட்டங்களுக்காக அதிக மக்கள் ஒன்றுகூடுவது பேரழிவுக்கு வழிவகுக்கும் என்பதால் நாட்டை முடக்குவது அவசியமானது எனவும் அவா் குறிப்பிட்டார்.
வியாழக்கிழமை முதல் நான்கு வாரங்களுக்கு பப்கள், உணவகங்கள், ஜிம்கள் மற்றும் அத்தியாவசியமற்ற கடைகள் மூடப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தொற்று நோயின் முதல் அலையில் இருந்ததைக் போலன்றி கட்டப்பாடுகள் இம்முறை கடுமையாக இருக்காது. பாடசாலைகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களைத் திறக்க முடியும்.
தொற்று நோய்க்கு மத்தியில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் மிகவும் வித்தியாசமாக இருக்கும். இப்போது கடுமையான நடவடிக்கை எடுப்பதன் மூலமே நாடு முழுவதும் மக்கள் மீண்டும் இயல்வு நிலைக்குத் திரும்புவதற்கான சூழல் உருவாகும் என பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்தார்.
இங்கிலாந்தில் நேற்று சனிக்கிழமை 21,915 புதிய தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டனர். இவற்றுடன் நாட்டில் இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்ட மொத்த தொற்று நோயாளர் எண்ணிக்கை 10 இலட்சத்து 11 ஆயிரத்து 660 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் நேற்று 326 போ் உயிரிழந்தனர். இவற்றுடன் நாட்டில் பதிவான மொத்த கொரோனா மரணங்கள் 46,555-ஆக உயர்ந்துள்ளன.
அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரான்ஸ், ஸ்பெயின், ஆர்ஜென்டினா மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகளைத் தொடர்ந்து 10 இலட்சத்தக்கு மேற்பட்ட தொற்று நோயாளர்கள் பதிவான 9-ஆவது நாடாக இங்கிலாந்து பதிவாகியுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: இங்கிலாந்து